திட்டக்குடியில் கடந்த இரு நாள்களாக நடைபெற்ற வருவாய்த் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) 858 மனுக்கள் பெறப்பட்டன.
திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடப்பாண்டுக்கான வருவாய்த் தீர்வாயம் வியாழக்கிழமை தொடங்கியது. துணை ஆட்சியர் (முத்திரைத் தாள்) சேதுராமன் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார். வட்டாட்சியர் கோ.செ.செல்வியம்மாள் முன்னிலை வகித்தார். வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திட்டக்குடி கிழக்கு குறுவட்டத்துக்குள்பட்ட கிராம மக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன. இதில், திட்டக்குடி வட்டம் முழுவதும் வறட்சி நிலவுவதால், அனைத்து கிராமங்களிலும் ஆய்வு செய்து தகுதியுள்ள விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் முறையிட்டனர். மேலும் பட்டா, பட்டா மாற்றம், மின் இணைப்பு தடையில்லா சான்று, குடும்ப அட்டை, சலவைப் பெட்டிகள் வழங்க வேண்டும்
என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக 294 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களில் 180 மனுக்கள் உடனடி விசாரணைக்கு ஏற்கப்பட்டன. 6 பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. வெள்ளிக்கிழமை 564 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 4 பேருக்கு உடனடியாக வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. பிற மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உரிய விசாரணைக்காக அனுப்பி வைக்கபட்டன. முகாமில் ஜமாபந்தி அலுவலரின் தனி உதவியாளர் நாசில் இக்பால், சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் சிவக்குமார், தலைமை நில அளவர் செல்வராசு, வருவாய் ஆய்வாளர் லட்சுமி உள்பட அனைத்து பிரிவு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
திங்கள்கிழமை பெண்ணாடம் குறுவட்டத்துக்கு உள்பட்ட கிராம மக்களிடம் மனுக்கள் பெறப்படுகிறது.