வேப்பூர் அருகே தீ விபத்தில் 12 ஆடுகள் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தன. 2 வீடுகள், நகை, பணம் எரிந்து சேதமடைந்தன.
வேப்பூர் அருகே உள்ள பெரியநெசலூரைச் சேர்ந்த கெங்காசலம் மனைவி அஞ்சலை (40). இவர் வியாழக்கிழமை இரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் அவரது வீடு திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனால் அஞ்சலை வீட்டிலிருந்து வெளியே ஓடிவந்தார். அப்பகுதி மக்கள் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் அருகிலுள்ள சீனிவாசன் என்பவரது வீட்டிலும் தீ பரவி எரிந்தது. இதில் 2 வீடுகளும் முற்றிலுமாக எரிந்தன.
இந்த விபத்தில் அஞ்சலை தனது வீட்டில் வைத்திருந்த ரூ.30 ஆயிரம் ரொக்கம், 7 பவுன் நகை, வீட்டுப் பத்திரங்கள் எரிந்தன. அதேபோல் சீனிவாசன் வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த 12 ஆடுகளும் தீயில் கருகி உயிரிழந்தன. மேலும், வீட்டினுள் இருந்த பொருள்களும் எரிந்துவிட்டன. இதுகுறித்து வேப்பூர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.