கந்துவட்டி வசூலித்ததாக இருவரை நெய்வேலி நகரிய போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
விருத்தாசலம் வட்டம், செடுத்தான்குப்பம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன்(33). இவர், அதே பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் (32) என்பவரிடம் ரூ.20 ஆயிரம் கடன் பெற்று திருப்பிச் செலுத்திவிட்டாராம். ஆனால், இதற்காக அளித்த ஆவணங்களை மணிகண்டன் திருப்பிக் கேட்டதற்கு, கூடுதலாக 10 சதவீதம் வட்டித் தொகை செலுத்த வேண்டும் எனக் கூறி அய்யப்பன் கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதேபோல, குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வடக்குத்து சக்தி நகரைச் சேர்ந்தவர் முருகவேல் (50). இவர், அதே பகுதியில் உள்ள செட்டிக்குளம் தெருவில் வசிக்கும் ஏழுமலை (45) என்பவரிடம் ரூ.10 ஆயிரம் கடன் பெற்று திருப்பிச் செலுத்தி விட்டாராம். இதற்காக ஆவணங்களை முருகவேல் திருப்பிக் கேட்டபோது, கூடுதலாக 10 சதவீதம் வட்டித் தொகை தர வேண்டும் எனக்கூறி ஏழுமலை கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து, மணிகண்டன், முருகவேல் ஆகியோர் அளித்த புகாரின் பேரில், நெய்வேலி நகரிய போலீஸார் வழக்குப் பதிந்து அய்யப்பன், ஏழுமலை ஆகிய இருவரையும் கைதுசெய்து, பின்னர் பிணையில் விடுவித்தனர்.