கடலூர் மாவட்ட காவல் துறையில் பணியாற்றி வரும் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான கண் பரிசோதனை முகாம் கடலூரில் உள்ள காவலர் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த முகாமை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் தொடக்கி வைத்தார். பின்னர், அவர் தனது கண்களைப் பரிசோதனை செய்து கொண்டார். அதைத் தொடர்ந்து காவலர்கள், அவர்களது குடும்பத்தினர்களுக்கு கடலூர் அரசுத் தலைமை மருத்துவமனை கண் மருத்துவர் அசோக் பாஸ்கர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பரிசோதித்தனர்.
மருத்துவர் குமதவள்ளி, மருத்துவ உதவியாளர்கள் கீதா, பார்த்தசாரதி, கண் ஒளி பரிசோதகர் மலர்விழி ஆகியோர் இந்தப் பரிசோதனைகளை மேற்கொண்டனர். முகாமில், 186 பேர் பதிவு செய்து கொண்டு, கண் பரிசோதனை மேற்கொண்டனர்.
இவர்களில் 22 பேருக்கு கண்ணாடி அணிவதற்கு பரிந்துரைத்ததாகவும், 20 பேருக்கு மேல் சிகிச்சை தேவைப்படுவதைத் தொடர்ந்து அரசு தலைமை மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டதாகவும் மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர்.
முகாமில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வேதரத்தினம், துணைக் கண்காணிப்பாளர் க.நரசிம்மன், ஆயுதப் படை ஆய்வாளர் சிவசங்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.