டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக, கடலூரிலுள்ள அரசுக் கல்லூரி மாணவர் விடுதியில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் ஆட்சியர் ஆய்வு நடத்தி வருகிறார். கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவர் விடுதியில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, விடுதியில் மழைநீர் சேகரிப்பு சின்டெக்ஸ் தொட்டி, மேற்புறம் உள்ள குடிநீர் சேமிக்கும் சின்டெக்ஸ் தொட்டி ஆகியவற்றை பார்வையிட்டு, தொட்டிகளை சுத்தம் செய்து குளோரினேஷன் செய்ய வேண்டுமென அறிவுரை வழங்கினார். பின்னர், சமையல் கூடத்தைப் பார்வையிட்டு அங்குள்ள குடிநீர் சேமித்து வைக்கும் பாத்திரங்களை தினந்தோறும் சுத்தமாக வைத்திருப்பதோடு, அன்றாடம் தண்ணீரை வெளியேற்றி மீண்டும் நிரப்பிட வேண்டுமென அறிவுறுத்தினார்.
பின்னர் அவர் கூறியதாவது: பொதுமக்கள் தங்களுக்கு காய்ச்சலுக்கான அறிகுறி ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு பொது மருத்துவமனைக்கு சென்று உரிய பரிசோதனை செய்து சிகிச்சை பெறவேண்டும்.
கடலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பினும், கொசுப் புழுக்களால் டெங்கு காய்ச்சல் ஏற்படாவண்ணம் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அவர்.
ஆய்வின்போது நகராட்சி ஆணையர் முஜிபுர் ரஹ்மான், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜி.ராமு, நகராட்சி நகர்நல அலுவலர் எழில்மதனா, விடுதிக் காப்பாளர் மும்மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.