கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வருகிற 17-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூர் மாவட்ட விவசாயிகளுக்கான நவம்பர் மாத குறைதீர் மற்றும் ஆலோசனைக் கூட்டம், வருகிற 17-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் தங்களது வேளாண்மை சார்ந்த குறைகளை கோரிக்கைகளாக வைக்க வாய்ப்பு வழங்கப்படும். கூட்ட அரங்கில் கோரிக்கைகளை தெரிவிக்க விரும்புவோர், அன்று காலை 8 மணி முதல் தங்களது பெயர், கோரிக்கை விவரம், கோரிக்கை தொடர்பான துறையின் பெயர் ஆகியவற்றை பதிவு செய்துக்கொள்ள வேண்டும். மேலும், தங்களது கோரிக்கைகளை மனுவாகவும் வழங்கலாம்.
இதன்மீது, சம்பந்தப்பட்ட துறையின் உயர் அலுவலர்கள் உரிய பதில் அளிக்கவும், மேலும் தொடர் நடவடிக்கையும் எடுக்கப்படும். எனவே, விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு ஆட்சியர் அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.