சிறப்புப் பள்ளிகளில் மாற்றுத் திறனாளி மாணவிகள் மர்மமான முறையில் உயிரிழப்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என கடலூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பு மற்றும் நலச் சங்கத்தினர் ஆட்சியரிடம் வலியுறுத்தினர்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில், அச்சங்கத்தின் தலைவர் சிவ.ரவிச்சந்திரன் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனு: மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளிகளை தொண்டு நிறுவனங்கள் நடத்தி வருகின்றன. இதில், கடந்த ஆண்டில் மேட்டுப்பாளையத்திலுள்ள சிறப்புப் பள்ளியில் பயின்று வந்த மாணவி மர்மமான முறையில் இறந்தார்.
இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு நெய்வேலி அருகே கோணாங்குப்பத்தில் இயங்கி வரும் பள்ளியில் பயின்ற பி.முட்லூரைச் சேர்ந்த மாற்றுத் திறன் மாணவி மர்மமான முறையில் இறந்துள்ளார். இதுபோன்ற மர்ம மரணங்கள் தொடராமல் தடுத்திட மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாற்றுத் திறனாளிகள் சங்கப் பிரதிநிதிகள் பங்குபெறும் வகையில் கண்காணிப்புக்குழு அமைக்க வேண்டும். இதுவரை நிகழ்ந்த மர்ம மரணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென அந்த மனுவில் வலியுறுத்தினர்.