தமிழகத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.1,265 கோடியை அக்.15-ஆம் தேதிக்குள் வழங்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தமிழ்நாடு, புதுச்சேரி தனியார் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலர் கார்மாங்குடி வெங்கடேசன் கூறினார்.
குறிஞ்சிப்பாடியில் தமிழ்நாடு, புதுச்சேரி மாநில கரும்பு விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னோடி விவசாயி வரதராஜன்பேட்டை ஆர்.தேவராஜ் தலைமை வகித்தார். கடலூர் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் கே.விஜயகுமார், விவசாயிகள் சங்கத் தலைவர் வி.வெங்கடபதி, குறிஞ்சிப்பாடி உழவர் மன்றத் தலைவர் ஆர்.கே.ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சங்கத்தின் மாநில பொதுச் செயலர் கார்மாங்குடி வெங்கடேசன் சிறப்புரையாற்றினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.1,265 கோடியை அக்.15-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும். இல்லை என்றால் தமிழக தொழில் துறை அமைச்சரை முற்றுகையிட்டு சிறைபிடிப்போம்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட, முனைமம் செலுத்திய விவசாயிகளுக்கு காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் உடனடியாக வரவு வைக்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் நஷ்டஈடு வழங்காத காப்பீட்டு நிறுவனத்தின் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும். அக்.15-ஆம் தேதிக்குள் கரும்பு நிலுவைத் தொகையை வழங்காவிட்டால், 16-ஆம் தேதி முதல் விவசாயிகள் வீடு, நிலங்களில் கருப்புக் கொடியேற்றி தீபாவளி பண்டிகையை கருப்பு தீபாவளியாகக் கடைப்பிடிப்பர் என்றார் அவர்.