பண்ருட்டி திருவதிகை ஸ்ரீசரநாராயணப் பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏகதின பிரம்மோற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
பண்ருட்டி, திருவதிகையில் ஹேமாம்புஜவல்லி தாயார் சமேத ஸ்ரீசரநாராயணப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் வியாழக்கிழமை ஏகதின பிரம்மோத்ஸவ விழா நடைபெற்றது. இதையொட்டி காலை 5 மணிக்கு சுப்ரபாரதம், 6 மணிக்கு தோமாலை சேவை, தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது.
காலை 8.15 மணிக்கு பெருமாள் அம்ச வாகனத்திலும், 9 மணிக்கு சிம்ம வாகனம், 10 மணிக்கு அனுமந்த வாகனம், 11 மணிக்கு சேஷ வாகனம், நண்பகல் 12 மணிக்கு கருட வாகனத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிற்பகல் 3 மணிக்கு யானை வாகன சேவையும், 4 மணிக்கு சூர்ணோத்ஸவம், 5 மணிக்கு குதிரை வாகன சேவையில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மாலை 6 மணிக்கு திருத்தேர் புறப்பாடு, இரவு 7 மணிக்கு தீர்த்தவாரி, 7.30 மணிக்கு கொடியிறக்கம் நடைபெற்றது.
முன்னதாக, காலை 6 மணிக்கு மூலவர் சரநாராயணப் பெருமாள், தாயார், சயன நரசிம்மர் சுவாமிகளுக்கு சிறப்புப் பூஜைகள், அர்ச்சனைகள் நடைபெற்று, மூலவர் பெருமாள் நெய்தீப தரிசனத்தில் திருமலை சீனுவாசபெருமாள் அலங்காரத்தில் அருள்பாலித்தார். விழாவை முன்னிட்டுஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் ஆணையர் பா.ஜெயசித்ரா, செயல் அலுவலர் க.நாகராஜன், சன்னதி அர்ச்சகர் ஸ்ரீராமன் பட்டாச்சாரியார், ஸ்ரீதர் பட்டாச்சாரியார் ஆகியோர் செய்தனர்.