கடலூர் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டி கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.
மழலை வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரையிலும், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு இரு குழுக்களாக போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும், மாணவ, மாணவிகளுக்கு தனித் தனியாக ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், 23 பள்ளிகளைச் சேர்ந்த 260 மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடினர். போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் மா.ராஜா வழங்கிப் பேசினார். இந்தப் போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அளவிலான போட்டிகள் நடைபெறும் நாள், இடம் ஆகியவை பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.