சிதம்பரம் அருகே சி.முட்லூர் அரசுக் கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் இலவசப் பேருந்து அட்டை வழங்கக் கோரி, வகுப்புகளைப் புறக்கணித்து புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே சி.முட்லூரில் அரசுக் கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு பயின்று வரும் மாணவ, மாணவிகள் தங்களுக்கு இலவசப் பேருந்து பயண அட்டை வழங்கப்படாததைக் கண்டித்து, புதன்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், கல்லூரி எதிரே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சிதம்பரம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் கே.அம்பேத்கர் மற்றும் போலீஸார் அங்கு வந்து மாணவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.
போக்குவரத்துக் கழகக் கிளை மேலாளரை தொடர்பு கொண்டு பேசி வருகிற 30-ஆம் தேதி வரை பழைய பேருந்து பயண அட்டையையே பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்ததைத் தொடர்ந்து மாணவர்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.