கடலூரில் அனைத்துக் குடியிருப்போர் நலச் சங்க கூட்டமைப்பினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலைக் கழிவுநீர் கெடிலம் ஆற்றில் கலந்து கம்மியம்பேட்டை தடுப்பணையில் தேங்குவதைத் தடுக்க வேண்டும். கம்மியம்பேட்டை குப்பை மேட்டை அகற்ற வேண்டும். டெங்கு பாதிப்பை உண்டாக்கும் கடலூர் ஊராட்சி, நகராட்சிப் பகுதிகளிலுள்ள சுமார் 100 சிறிய குப்பைமேடுகளை அப்புறப்படுத்த வேண்டும். கம்மியம்பேட்டை தடுப்பணையில் மக்கள், விலங்குகள், தாவரங்களுக்கு உயிர்கொல்லியாக விளங்கும் சுமார் 8 ஆண்டுகளாக தேங்கியுள்ள ஆயிரக்கணக்கான டன் நச்சுக் கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூர் அனைத்துக் குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பினர் கடலூர் தலைமைத் தபால் நிலையம் அருகே புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவர் பி.வெங்கடேசன் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் கண்ணன், நடராஜன், ரவிச்சந்திரன், மாயவேல், கோமதிநாயகம், கிருஷ்ணமூர்த்தி, மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தார். பொதுச் செயலர் மு.மருதவாணன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். இணைப் பொதுச் செயலர் பி.புருஷோத்தமன் வரவேற்றார். பொருளாளர் சுகுமாறன் நன்றி கூறினார்.