சாராய வியாபாரி குண்டர் சட்டத்தின் கீழ் கைது
கடலூர் முதுநகர் அருகே உள்ள ஓட்டேரியைச் சேர்ந்த சாராய வியாபாரி குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
கடலூர் முதுநகர் அருகே உள்ள ஓட்டேரியைச் சேர்ந்தவர் நாகப்பன் மகன் ராமலிங்கம் (எ) ராமு (28). இவர், ஓட்டேரி சுடுகாடு அருகே 120 லிட்டர் சாராயத்தைப் பதுக்கி வைத்திருந்ததாகக் கூறி, கடலூர் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துறையினர் கடந்த மாதம் அவரைக் கைது செய்தனர்.
தொடர்ந்து, ராமு குறித்து நடத்திய விசாரணையில் அவர் மீது கடலூர் மதுவிலக்கு அமல் பிரிவு, திருப்பாதிரி புலியூர் காவல் நிலையம், பண்ருட்டி மது விலக்கு அமல் பிரிவில் 9 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது.
எனினும், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதால் அவரின் நடவடிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் பரிந்துரைத்தார். அதன்பேரில், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே அதற்கான உத்தரவை அண்மையில் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து, ராமு குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டார்.