பண்ருட்டி சாமியார் தர்கா செல்லும் வழியில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் மழை நீர் தேங்கி நிற்பதால், அந்த வழியாகச் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
விழுப்புரம் - மயிலாடுதுறை ரயில்வே கடவுப் பாதையில், பண்ருட்டி சாமியார் தர்கா அருகே சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது, பண்ருட்டியில் ரயில்வே மேம்பாலம் பணி நடைபெற்று வருவதால், மேற்கண்ட வழியாகத்தான் சாமியார் தர்கா, எல்.என்.புரம், கணிசப்பாக்கம், வ.உ.சி நகர், முத்தையா நகர், சித்திரைச்சாவடி உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.
இந்தச் சுரங்கப் பாதை தாழ்வான பகுதியாக இருப்பதால், மழை நீர் வடிந்து செல்ல முறையான கட்டமைப்பு வசதி இல்லை. இதனால், சிறிய அளவில் மழைக்கே சுரங்கப் பாதையில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி விடுகிறது. எனவே. இந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
சுரங்கப் பாதை சேறும், சகதியுமாக உள்ளதால் பாதசாரிகள் இதில் நடந்து செல்வதைத் தவிர்த்து, ஆபத்தை உணராமல் ரயில்வே பாதையை கடந்து செல்கின்றனர். இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறியதாவது:
இந்தச் சுரங்கப் பாதை வழியாக அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலரும் சைக்கிள், இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அனைத்துத் தரப்பு மக்களும் அவதியடைந்து வருகின்றனர். சிறிய மழைக்குக் கூட அதிக அளவு தண்ணீர் தேங்கிவிடுகிறது. எனவே, சுரங்கப் பாதையில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற நகர நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.