டெங்கு காய்ச்சல் உயிரிழப்புக்கு தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் பொறுப்பேற்று உடனடியாகப் பதவி விலக வேண்டும் என பிற்படுத்தப்பட்டோர் பேரவை வலியுறுத்தியது.
இதுகுறித்து பிற்படுத்தப்பட்டோர் பேரவையின் அகில இந்திய பொதுச் செயலர் வீரவன்னியராஜா வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சலால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து முழுமையான உயிரிழப்பு விவரங்களை மறைக்கும் வகையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைக் குறைத்து கூறுவது ஜனநாயகப் படுகொலை மட்டுமல்ல, டெங்கு காய்ச்சலால் போராடிக் கொண்டிருக்கும் நபர்களுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும். டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த அவ்வப்போது போதிய விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தாததாலும், போர்க்கால அடிப்படையில் சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்காததாலும் நுôற்றுக் கணக்கான உயிரிழப்புகளை தமிழகம் சந்தித்து வருகிறது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத காரணத்தால், கிராமங்கள், நகர்ப்புறப் பகுதிகளில் குப்பைகள் தேங்கி, துர்நாற்றம் வீசும் அளவுக்கு சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டதன் விளைவே டெங்கு காய்ச்சல் அதிகரிப்பதற்கு காரணமாகும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 24 மணி நேரமும் பணியாற்ற மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக அலுவலர்கள், உதவியாளர்களை நியமிக்க வேண்டும்.
மேலும், நடமாடும் அவசர மருத்துவ வாகனங்கள் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று மருத்துவ சிகிச்சைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டால்தான் டெங்குவில் இருந்து தமிழகத்தை மீட்க முடியும்.
டெங்குவால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். நிவாரண நிதியாக ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெங்கு காய்ச்சல் விவகாரத்தில் தனிக் கவனம் செலுத்தி, பிரச்னைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.