நகராட்சிப் பகுதிகளில் வசிப்போருக்கு அரசால் வழங்கப்படும் பட்டாவைப் பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தினார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசால் மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் வருவாய் பின்தொடர் பணியின் கீழ், வருவாய் பதிவேடுகளில் இது நாள் வரையிலான பதிவுகளைச் சரி செய்து, நில உரிமையாளர்களுக்கு ஆவணங்களின் அடிப்படையில் பட்டா வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, மாவட்டத்தில் கடலூர், விருத்தாசலம், நெல்லிக்குப்பம் ஆகிய நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கிரையம், பூர்வீகம் மூலம் பாத்தியப்பட்ட வீடுகள், மனைகள், விவசாய நிலங்களுக்கும், நத்தம் புறம்போக்கு நிலத்தில் தகுந்த பதிவு செய்யப்பட்ட ஆவண ஆதாரங்களுடன் வீடு கட்டி வசிப்பவர்களுக்கும் புகைப்படத்துடன் கூடிய பட்டா வழங்கப்பட்டு வருகிறது.
கடலூர் நகராட்சியில் வார்டு எண்கள் 1 முதல் 7 வரையிலான முதுநகர், பச்சையாங்குப்பம், செல்லங்குப்பம், திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம், வன்னியர் பாளையம், தேவனாம்பட்டினம், உதாரமாணிக்கம், வில்வராயநத்தம், கோண்டூர் ஆகிய பகுதியினருக்கு முதல் கட்டமாக பட்டா வழங்கப்படுகிறது.
அதேபோல, விருத்தாசலம் நகராட்சியில் வயலூர், மணலூர், நாச்சியார்பேட்டை, கண்டியாங்குப்பம், விருத்தாசலம், பூதாமூர், பூந்தோட்டம், ஏனாதிமேடு ஆகிய பகுதிகளுக்கும் வழங்கப்படுகிறது.
நெல்லிக்குப்பம் நகராட்சியில் 1 முதல் 18 வட்டங்களுக்கு உள்பட்ட திருக்கண்டேஸ்வரம் பகுதிகளுக்கு பட்டா வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பட்டாக்கள் இனி வரும் காலங்களில் முக்கிய ஆவணமாக கருதப்படும்.
எனவே, இதுவரை பட்டா பெறாதவர்கள் தங்கள் சொத்துக்குரிய ஆவணங்களை நகர நிலவரித் திட்ட வட்டாட்சியரிடம் ஆஜர்படுத்தி இந்தத் திட்டத்தின் கீழ், புகைப்படத்துடன் கூடிய பட்டா பெற்றுக் கொள்ளலாம் என்று ஆட்சியர் மு.வடநேரே தெரிவித்தார்.