கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள், மாணவர்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் டெங்கு நோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் நிலவேம்புக் குடிநீர் வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான பி.தனபால் தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார். சார்பு-நீதிபதி என்.சுந்தரம் முன்னிலை வகித்தார். கடலூர் நகராட்சி ஆணையர் முஜிபூர்ரகுமான் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று டெங்கு நோய் குறித்த தகவல்களையும், அதிலிருந்து நம்மைக் காக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் வழக்குரைஞர்கள், நீதிமன்ற ஊழியர்களுக்கு எடுத்துரைத்தார். மகளிர் மன்ற நீதிபதி எம்.செல்வம், மாவட்ட கூடுதல் நீதிபதி திலகவதி கோவிந்தராஜன் உள்பட அனைத்து நீதிபதிகளும், நகராட்சி நகர்நல அலுவலர் எழில்மதனா, வழக்கறிஞர் சங்கத் தலைவர் வி.லோகநாதன், செயலர் வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதுநிலை நிர்வாக அலுவலர் ஆர்.ரங்கநாதன் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மற்றும் நீதிமன்ற வளாகத்திலிருந்தவர்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது.
சிதம்பரம்: சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் சிவபுரி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் கே.குமரவேல் வரவேற்றார். சிதம்பரம் சென்டர் ரோட்டரி சங்கத் தலைவர் பி.முகமதுயாசின் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அண்ணாமலைநகர் காவல் ஆய்வாளர் எழுமலை பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கிப் பேசினார்.
ரோட்டரி செயலர் எம்.சீபக்குமார் டெங்கு விழிப்புணர்வு பற்றி உரையாற்றினார். நிகழ்ச்சியில் பொறியாளர் கே.கிருபாநிதி, சிவபுரி என்.லட்சுமணன், தலைமைக் காவலர் கப்பதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். உதவி தலைமை ஆசிரியர் ஜே.வெங்கடேசன் நன்றி கூறினார்.