மத்திய அரசைக் கண்டித்து கடலூரில் காங்கிரஸ் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித்ஷாவின் மகன் நடத்தி வரும் நிறுவனம் குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்டியதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது.
இந்தப் பிரச்னையில் மத்திய அரசு தலையிட வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுமென மாநிலத் தலைமை அறிவித்தது.
அதன்படி கடலூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் எம்.ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில சொத்துப் பாதுகாப்புக் குழு ஏ.எஸ்.சந்திரசேகரன், கர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் ஓவியர் ரமேஷ், மாவட்ட துணைத் தலைவர்
ஜெ.வேலுமணி, மாவட்டச் செயலர் கிஷோர்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரத் தலைவர் என்.குமார் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் அமித்ஷா மகன் நடத்திவரும் நிறுவனத்தின் வருமானம் குறித்து விசாரணை நடத்தக் கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. வட்டாரத் தலைவர்கள் ரமேஷ், சீத்தாராமன், ராமச்சந்திரன், நிர்வாகிகள் ப.கோபால், இளஞ்செழியன், ராஜன், மாரிமுத்து, பாலகுரு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.