கடலூர் மாவட்ட பாசனத்துக்காக கல்லணை, கீழணையிலிருந்து போதிய தண்ணீர் திறந்துவிடக் கோரி, காட்டுமன்னார்கோவிலில் விவசாயி ஒருவர் வியாழக்கிழமை மரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காட்டுமன்னார்கோவிலில் மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நடுவர் நீதிமன்றம் எதிரே உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாக மரத்தின் மீது 60 வயது மதிக்கத்தக்க முதியவர் வியாழக்கிழமை ஏறினார். அவர் தனது கையில் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலும் வைத்திருந்தார். அப்போது, அவர், பாசனத்துக்காக கல்லணை, கீழணை ஆகியவற்றில் தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காட்டுமன்னார்கோவில் நகர காவல் ஆய்வாளர் ஷியாம்சுந்தர், சார்பு-ஆய்வாளர் சிவராமன் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அந்த முதியவரிடம் கீழே இறங்கி வருமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால், அவர் மறுத்துவிட்டார்.
அப்போது அங்கிருந்த விவசாய சங்க தலைவர் கே.வி.இளங்கீரன் போராட்டத்தில் ஈடுபட்ட முதியவரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து முதியவர் மரத்தில் இருந்து கீழே இறங்கி வந்தார். அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், வேளம்பூண்டியைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி இந்திரஜித் (61) எனத் தெரியவந்தது. இனிமேல் இதுபோன்ற முயற்சியில் ஈடுபடக் கூடாது என அவரிடம் போலீஸார் அறிவுறுத்தினர்.