திட்டக்குடி அருகே ரூ.10 லட்சம் செலவில் வெட்டப்பட்ட தரைக்கிணறு பயன்பாடின்றி உள்ளது.
பெண்ணாடம் அருகே உள்ள நல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்டது மதுரவல்லி கிராமம். இந்தக் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் உள்ளிட்டத் தேவைகளுக்காக ஊராட்சியில் 2015-16-ஆம் நிதி ஆண்டில் தாய் திட்டத்தின் கீழ் திறந்தவெளி கிணறு, மின்மோட்டாருடன் கூடிய நீரேற்றும் அறை உள்ளிட்டவை ரூ.10.5 லட்சத்தில் அமைக்கப்பட்டன. இந்தக் கிணறு வெட்டப்பட்டும், மின்மோட்டார் அமைக்கப்பட்டும் ஓராண்டாகியும் இதுவரை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அளிக்கப்படவில்லை.
மேலும் கிணறு அமைக்கும்போது கிணற்று நீருடன் கழிவுநீர் கலந்ததால் தற்போது கிணறு தூர்ந்துள்ளது. இதனால் கிணற்றில் உள்ள நீரின் நிறம் மாறி உள்ளதாகவும், அதன்பிறகு கிணற்றை இதுவரை சுத்தம் செய்யவில்லை எனவும் அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். மேலும், அருகிலுள்ள வனப் பகுதியிலிருந்து குரங்குகள், பறவைகள் உள்ளிட்டவை குடிநீருக்காக இந்த கிணற்றுக்கு வருகின்றன. வனவிலங்குகளின் எச்சம் தண்ணீருடன் கலந்து விடுவதால் தொற்று நோய் பரவும் சூழ்நிலை உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக கிணற்றிலுள்ள கழிவுநீரை வெளியேற்றி சுத்தப்படுத்தி, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.