வாக்கி-டாக்கி, குட்கா ஊழல்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறினார்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள பெரியவடவாடியில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
டெங்கு காய்ச்சல் தொடர்பாக தமிழக அரசு தவறான தகவல்களை தெரிவிக்கிறது. இந்த விஷயத்தை மூடி மறைப்பதைக் விட்டு விட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகளையும், சிகிச்சைகளையும் முறையாக மேற்கொள்ள வேண்டும்.
என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள், ஊழல்கள் நடைபெறுகின்றன. இந்த நிறுவனம், கடலூர் மாவட்ட மக்களுக்கான நீரை, நிலத்தை அவர்களின் வாழ்வாதாரத்தை உறிஞ்சி எடுத்து அதன்மூலம் கிடைக்கும் வருவாயை வட மாநிலங்களில் முதலீடு செய்கிறது.
எனவே, தமிழ்நாட்டில் முதலீடு செய்து மண்ணின் மைந்தர்களுக்கு வேலை தர வேண்டும். தமிழ் நாட்டில் மது விற்பனை மட்டுமே நடைபெறுகிறது. ஆட்சியாளர்கள் அதில்தான் கவனம் செலுத்துகிறார்கள்.
மத்திய பாஜக அரசு இவர்களுக்கு ஆதரவாக உள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற வாக்கி-டாக்கி, குட்கா ஊழல்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தினால்தான் உண்மைகள் வெளிவரும். அதற்காக பாமக சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். தற்போது குடிநீர்ப் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. ஆனால் மழை நீரை சேமிக்க தவறி விட்டோம்.
திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் நீர் மேலாண்மைத் திட்டங்களை செயல்படுத்தவில்லை. மாறாக மதுக் கடைகளையே திறந்துள்ளனர் என்றார் அன்புமணி.