11 பொறியியல் மாணவர்களுக்கு இளம் சாதனையாளர் விருது
கடலூர் சி.கே.பொறியியல் கல்லூரி மாணவர்கள் 11 பேர் இளம் சாதனையாளர் விருது பெற்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளிலிருந்து சிறந்த அறிவியல் படைப்புகளை வெளியிடும் மாணவர்களுக்கு, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நினைவாக இளம் சாதனையாளர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நிகழாண்டில் இந்த விருதுக்கான தேர்வுப் போட்டியில், 200 கல்லூரிகளிலிருந்து 1,072 செய்முறை சாதனங்கள் பங்கேற்றன. 6 கட்டங்களாக நடைபெற்ற தேர்வுகளில் அரையிறுதி தேர்வில் 570 செய்முறைகள் தேர்வு பெற்றன. இறுதித் தேர்வு சென்னையில் கடந்த 15-ஆம் தேதி நடத்தப்பட்டு 64 பேருக்கு இளம் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இவர்களில், 11 பேர் கடலூர் சி.கே.பொறியியல் கல்லூரி மாணவர்களாவர். இவர்களில் 8 பேர் இயந்திரவியல் துறை, 3 பேர் மின்னியல் துறையையும் சேர்ந்தவர்களாவர் என்று கல்லூரி நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருது பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்விக் குழுமத்தின் நிறுவனர் சி.கே.ரங்கநாதன், இயக்குநர் டி.சந்திரசேகரன், கல்லூரி முதல்வர் அருண் வி.பர்வதே மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பாராட்டு தெரிவித்தனர். கடந்த முறை 2 பேர் இந்த விருதைப் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.