ஊதிய உயர்வு வழங்கியதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாநாடு நடத்த தமிழ்நாடு அனைத்து ஆசிரியர்கள் முன்னேற்றப் பேரவை முடிவு செய்துள்ளது.
தமிழக அரசு அண்மையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்தது.
இந்த நிலையில், ஊதிய உயர்வு நன்றி அறிவிப்பு மாநாடு நடத்திட தமிழ்நாடு அனைத்து ஆசிரியர்கள் முன்னேற்றப் பேரவை முடிவு செய்துள்ளது. அதுதொடர்பான ஆயத்தக் கூட்டம் கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது .
கூட்டத்துக்கு, பேரவையின் மாநிலத் தலைவர் பா.ஆரோக்கியதாஸ் தலைமை வகித்து கோரிக்கைகள் குறித்து விளக்க உரையாற்றினார்.
கூட்டத்தில், தொகுப்பூதிய, பகுதிநேர ஆசிரியர்களுக்கு 30 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கிய அரசுக்கு நன்றி தெரிவிப்பது.
மேலும் நன்றி தெரிவிக்கும் மாநாட்டை வருகிற நவம்பர் 3-ஆவது வாரத்தில் சென்னையில் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், தொகுப்பூதியத்தில் பணிபுரியும் 15 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு வாரத்துக்கு 5 நாள்கள் வேலை வழங்கி, மாதம் ரூ.18 ஆயிரம் சிறப்பு காலமுறை ஊதியமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்தில், நிர்வாகிகள் பாக்யராஜ், இளவரசன், பெருமாள், மயூராவேலன், கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வரவேற்றார். இணை ஒருங்கிணைப்பாளர் செ.மாரிமுத்து நன்றி கூறினார்.