கரும்பு நிலுவைத் தொகை தொடர்பாக விரைவில் பேச்சுவார்த்தை: அமைச்சர் எம்.சி.சம்பத்

கரும்பு நிலுவைத் தொகை விநியோகம் தொடர்பாக சர்க்கரை ஆலை நிர்வாகத்தினருடன் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார் தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்.

கரும்பு நிலுவைத் தொகை விநியோகம் தொடர்பாக சர்க்கரை ஆலை நிர்வாகத்தினருடன் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார் தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்.
 தமிழகம் முழுவதும் தனியார், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் விவசாயிகளிடமிருந்து கரும்புகளை  கொள்முதல் செய்கின்றன. இதற்கான கொள்முதல் விலையை மத்திய, மாநில அரசுகள் நிர்ணயம் செய்கின்றன. இதில், மத்திய அரசு நிர்ணயம் செய்த விலையை மட்டுமே கடந்த 4 ஆண்டுகளாக சர்க்கரை ஆலைகள் வழங்கி வருகின்றன. மாநில அரசின் ஆதார விலையான டன்னுக்கு ரூ.165 வழங்கப்படவில்லை. இவ்வாறு வழங்கப்படாத தொகையானது கடலூர் மாவட்டத்துக்கு ரூ.130 கோடியாகவும், தமிழகம் முழுவதும் ரூ.1,285 கோடியாகவும் உள்ளது.
 எனவே, நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் சார்பில் அண்மையில் போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில், சர்க்கரை ஆலைகளிடமிருந்து தீபாவளிக்கு முந்தைய நாளுக்குள் நிலுவைத் தொகையில் ஒரு பகுதி பெற்றுத்தரப்படுமென தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதியளித்தார். அதன்பேரில் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. எனினும், இந்தத் தொகை வழங்கப்படவில்லை. இதனைக் கண்டித்து தீபாவளிக்கு முந்தைய நாளில் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்களது வீடு, வயல்களில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 இதுகுறித்து கடலூரில் தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்திடம் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது: தனியார் சர்க்கரை ஆலைகள் கடந்த 4 ஆண்டுகளாக மாநில அரசின் ஆதார விலையை வழங்கவில்லை. இதற்கு முந்தைய 2 ஆண்டுகளாக சர்க்கரை விலை குறைவாக இருந்ததை காரணம் காட்டுகிறார்கள். எனினும், 2015-16, 2016-17 ஆகிய நிதியாண்டுகளில் சர்க்கரை விலை உயர்ந்துள்ளது. எனவே, தீபாவளிக்கு முன்னர் நிலுவைத் தொகையை வழங்க வேண்டுமென வலியுறுத்தினோம். இதுகுறித்து அடுத்த வாரம் அரசின் வேளாண்மைத் துறை செயலர், முதன்மைச் செயலர் உள்ளிட்டோர் பங்கேற்கும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அதில் உரிய தீர்வு காணப்படாவிட்டால் சர்க்கரை ஆலைகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com