மாநில மூத்தோர் தடகளப் போட்டிக்கான கடலூர் மாவட்ட வீரர், வீராங்கனைகள் தேர்வுப் போட்டி நெய்வேலி, பாரதி விளையாட்டு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
36-ஆவது மாநில மூத்தோர் தடகளப் போட்டிகள் வருகிற டிச. 9, 10-ஆம் தேதிகளில் கரூரில் நடைபெற உள்ளது. இதில் கடலூர் மாவட்டம் சார்பில் பங்கேற்கும் வீரர்-வீராங்கனைகள் தேர்வுப் போட்டி நெய்வேலியில் நடைபெற்றது. கடலூர் மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தினர் இந்தத் தேர்வை நடத்தினர். தொடக்க விழாவுக்கு என்எல்சி இந்தியா விளையாட்டுத் துறை துணை முதன்மை மேலாளர் வீரபத்திரன் தலைமை வகித்தார். மூத்தோர் தடகள சங்க மாவட்டச் செயலர் சுவாமிதாஸ் முன்னிலை வகித்தார். தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார்.
இதில், 100 மீ, 200 மீ உள்ளிட்ட ஒட்டப் பந்தயப் பிரிவுக்கும், 5 கி.மீ. நடை போட்டிக்கும், குண்டு, வட்டு, ஈட்டி எறிதல், உயரம், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, ஒவ்வொரு வயதுக்கேற்ற பிரிவுகளில் தலா 2 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதேபோல வீராங்கனைகளும் பல்வேறு பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டனர். முகாமில், 75 வயதுக்கு மேற்பட்ட முதியோர் பலர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.