மாமியார் வீட்டில் 4.5 பவுன் நகைகள் திருடியதாக மருமகன் கைது செய்யப்பட்டார்.
விருத்தாசலம் வட்டம், கார்கூடலைச் சேர்ந்தவர் மதியழகன் (40). இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் புதுச்சேரியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மனைவி நிர்மலா உடனிருந்து கவனித்து வருகிறாராம்.
ஞாயிற்றுக்கிழமை நிர்மலா வீடு திரும்பியபோது, கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த நெக்லஸ், மோதிரம் உள்பட 4.5 பவுன் நகைகள் திருடுபோனது தெரிய வந்தது. இதுகுறித்து நிர்மலா கம்மாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வபாண்டியன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினார். இதில், நிர்மலாவின் மருமகனும், அதேப் பகுதியைச் சேர்ந்தவருமான ராஜேஷ் (24) என்பவர் நகைகளை திருடியது தெரிய வந்தது.
இதனையடுத்து அவரிடமிருந்து நகைகளை கைப்பற்றிய காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.