அட்மா திட்டத்தின் கீழ் தானியம், சிறுதானியப் பயிர்கள் குறித்து விவசாயிகளுக்கான ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மைப் பயிற்சி முகாம் கீழ்கவரப்பட்டு கிராமத்தில் அண்மையில் நடைபெற்றது.
பயிற்சிக்கு அண்ணாகிராமம் வேளாண்மை உதவி இயக்குநர் மல்லிகா தலைமை வகித்தார். அவர் பேசுகையில், பனிவரகு, திணை, சாமை, வரகு ஆகிய சிறுதானியங்களில் அதிகளவில் புரதம், தாது உப்புக்கள், நார்ச் சத்து ஆகியவை உள்ளன. சிறுதானியப் பயிர்கள் வறட்சியை தாங்கி வளரக்கூடியவை. குறைவான நீரைப் பயன்படுத்தி சிறுதானியங்களை எளிதில் சாகுபடி செய்யலாம் என்றார்.
மேலும், சிறுதானியப் பயிர்கள் விதைப்பு முறை, களை கட்டுப்பாடு, நீர் நிர்வாகம், அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பம் குறித்து வேளாண்மை அலுவலர் சுரேஷ் விளக்கமளித்தார்.
விதை நேர்த்தி, விதையால் பரவக்கூடிய நோய்கள், அவற்றை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வட்டார தொழில்நுட்ப மேலாளர் அழகுமதி செயல்விளக்கம் அளித்தார். உதவி வேளாண்மை அலுவலர் சின்னதுரை, உதவி தொழில்நுட்ப மேலாளர் தண்டபாணி ஆகியோர் பயிற்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.