கடலூர் மாவட்டம் முழுவதும் கால்நடைகளுக்கான கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் இந்த மாத இறுதி வரை நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு கடலூர் அருகே உள்ள அரிசிபெரியாங்குப்பம் ஊராட்சி, குமாரப்பேட்டையில் வியாழக்கிழமை கால்நடைகளுக்கான கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் நடத்தப்பட்டது. முகாமில் கால்நடைத் துறை உதவி இயக்குநர் கு.குபேந்திரன் மேற்பார்வையில், ராமாபுரம் கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர் ஸ்டாலின்வேதமாணிக்கம் தலைமையில் கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி போடப்பட்டது. மருத்துவர் சுரேந்தர், ஓய்வுபெற்ற கால்நடை ஆய்வாளர் தி.ராசமச்சேந்திரசோழன் ஆகியோர் இந்தப் பணிகளில் ஈடுபட்டனர். முகாமில், ஆதிபராசக்தி நகர், கோவிந்தம்மாள் நகர், முத்தமிழ் நகர், ராமானுஜம் நகர் பகுதிகளைச் சேர்ந்த 232 கறவை மாடுகள், கன்றுகள், எருமை மாடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
அடுத்தகட்டமாக கீரப்பாளையம், கொடுக்கன்பாளையம், மலையடிகுப்பம் ஆகிய பகுதிகளில் கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாகவும், எனவே, அந்தப் பகுதியினர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.