பண்ருட்டி - அரசூர் சாலையோரங்களில் வளர்ந்துள்ள புளிய மரங்களின் கிளைகளை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் வெட்டி அப்புறப்படுத்தி வருகின்றனர்.
பண்ருட்டி - புதுப்பேட்டை - அரசூர் சாலையில் இருபுறங்களிலும் புளிய மரங்கள் உள்ளன. இந்த மரங்களின் கிளைகளை நெடுஞ்சாலைத் துறையினர் வெட்டிஅகற்றி வருகின்றனர்.
மரக்கிளைகள் வெட்டப்பட்டு வருவதால் சாலையில் பசுமையும், இயற்கை எழிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: இந்த மரங்களால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. பல ஆண்டுகளாக இந்தப் பகுதியில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை. மரக்கன்றுகளை நட்டு சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டும் என விழுப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், அரசுத் துறையே மரக்கிளைகளை வெட்டி வருவது வேதனை அளிக்கிறது. மரக் கிளைகள் வெட்டுவது நாளடைவில் மரம் இறப்பதற்கு வழி வகுக்கும்.
எனவே, மரங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதுதொடர்பாக, நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளர் தெய்வநாயகி கூறியதாவது: மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில், மரக்கிளைகள் முறிந்து விழுந்து உயிர் சேதத்தை ஏற்படும் என்பதால், உயரதிகாரிகளின் உத்தரவின் பேரில், போக்குவரத்துக்கு இடையூராகவும், தாழ்வாகவும் உள்ள மரக்கிளைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெட்டப்பட்டு வருகின்றன என்றார்.