நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாணவர் அமைப்பான முற்போக்கு மாணவர் கழகத்தினர் கடலூரில் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் செல்வ.மணிகண்டராஜா தலைமை வகித்தார். துணை அமைப்பாளர்கள் புருஷோத்தமன், ஜெகன், புஷ்பராஜ், அருள்ராஜ், ஜெயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாவட்டச் செயலர் சா.முல்லைவேந்தன், கடலூர் நாடாளுமன்ற தொகுதிச் செயலர் பா.தாமரைச்செல்வன், மாவட்ட துணை அமைப்பாளர் இல.திருமேனி ஆகியோர் நீட் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விளக்கிப் பேசினர். மேலும், சட்டப் பேரவை தொகுதிச் செயலர் மு.அறிவுடைநம்பி, மாநில துணைச் செயலர் த.ஸ்ரீதர், ஒருங்கிணைப்பாளர் பிரதீப் ஆகியோர் பேசினர். முன்னதாக நகரச் செயலர் செந்தில் வரவேற்றார். நிர்வாகி மயில்வாகனன் நன்றி கூறினார்.