கடலூரில் மீன் நிறுவன ஊழியரிடம் ரூ.3 லட்சம் திருடப்பட்டது.
கடலூர் அருகே உள்ள வண்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (51). கடலூர் துறைமுகத்திலுள்ள மீன் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார்.
இவர் சனிக்கிழமை தனது மோட்டார் சைக்கிளில் முதுநகரிலுள்ள வங்கிக்குச் சென்று ரூ.4 லட்சம் பணம் எடுத்துள்ளார். அதில், துறைமுகத்திலுள்ள ஒரு நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் கொடுப்பதற்காக தனியாக பிரித்து எடுத்துச் சென்றார். மீதமுள்ள பணத்தை மோட்டார் சைக்கிளில் இருக்கைக்கு கீழ் பகுதியில் வைத்துள்ளார். சிறிது நேரத்துக்குப்பின் திரும்பி வந்து பார்த்தபோது வாகனத்தின் இருக்கை உடைக்கப்பட்டு பணம் திருடுபோனது தெரிய வந்தது.
இதுகுறித்து கடலூர் முதுநகர் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.