காவல் துறையினரால் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 149 வாகனங்கள் வருகிற 18-ஆம் தேதி ஏலம் விடப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு காவல் நிலையங்களில் 146 இருசக்கர வாகனங்கள், ஒரு டாடா ஏஸ், இரண்டு லாரிகள் பல்வேறு வழக்குகள் தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வாகனங்களுக்கு யாரும் இதுவரை உரிமை கோராத காரணத்தால், சட்ட விதிகளுக்குள்பட்டு அரசுடமையாக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் மாவட்ட அரசிதழில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. எனினும், யாரும் உரிமை கோராததால் 149 வாகனங்களையும் ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடலூர் புதுக்குப்பத்தில் உள்ள மாவட்ட ஆயுதப் படை அலுவலகத்தில் ஏப்.18-ஆம் தேதி காலை 9 மணிக்கு வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது. இருசக்கர வாகனத்தை ஏலத்தில் எடுக்க விரும்புவோர் ரூ.ஆயிரமும், 3 சக்கர வாகனத்துக்கு ரூ.3 ஆயிரமும், 4 சக்கர வாகனத்துக்கு ரூ.5 ஆயிரமும் முன்பணமாக செலுத்தி டோக்கன் பெற்று ஏலத்தில் பங்கேற்கலாம்.
ஏலம் எடுக்காதபட்சத்தில் மேற்படி தொகை அன்றே திருப்பி கொடுக்கப்படும் என்று மாவட்ட எஸ்பி அதில் தெரிவித்துள்ளார்.