தெளிப்பு நீர் பாசனக் கருவிகள் அமைத்த வயல்களில் வேளாண் உதவி இயக்குநர் வெங்கடாஜலபதி அண்மையில் ஆய்வு செய்தார்.
கடலூர் வட்டத்தில் பிரதமரின் விவசாயப் பாசன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கரும்பு, தென்னை, மணிலா, உளுந்து, மக்காச்சோளம் பயிர் செய்யப்பட்ட வயல்களில் சொட்டு நீர், தெளிப்பு நீர் கருவிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதமும் மானியம் அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில், சேடப்பாளையத்தில் தென்னைக்கு அமைக்கப்பட்ட பாசனக் கருவிகளை சென்னை வேளாண் இயக்குநரக உதவி இயக்குநர் (கணினியியல்) வெங்கடாஜலபதி அண்மையில் சென்று பார்வையிட்டு விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர், வாண்டரசன்குப்பத்தில் முன்னோடி விவசாயி அறவாழி சாகுபடி செய்துள்ள மரவள்ளி பயிர் செய்யப்பட்ட வயல்களில் அமைக்கப்பட்ட நுண்ணீர் பாசனம் குறித்து ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, குறிஞ்சிப்பாடி வட்டம், வழுதலம்பட்டு, புலியூர், அண்ணாகிராமம் வட்டம், மேல்பட்டாம்பாக்கம் பகுதிகளில் அமைக்கப்பட்ட சொட்டு நீர் பாசனம், நிழல் வலை நாற்றங்கால் ஆகியவற்றை அவர் ஆய்வு செய்தார்.
கடலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் என்.கனகசபை, உதவி இயக்குநர் சு.பூவராகன், வேளாண் அலுவலர்கள் டி.பார்த்தசாரதி, தரணிகாமாட்சி ஆகியோர் உடனிருந்தனர்.