பண்ருட்டி அருகே தோசை சாப்பிட்ட முதியவர் திங்கள்கிழமை உயிரிழந்தார். வாந்தி மயக்கம் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட 2 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பண்ருட்டி ஒன்றியம், சொரத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி சுதா. இவர்களுக்கு சுபா (16), சுதாகர்(11) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். திங்கள்கிழமை மதியம் பழனிவேலின் தந்தை ராமச்சந்திரன் (76), குழந்தைகள் சுபா, சுதாகர் ஆகியோர் வீட்டில் தோசை சுட்டு சாப்பிட்டனராம். சிறிது நேரத்தில் இவர்கள் அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதில், ராமச்சந்திரன் உயிரிழந்தார்.
ஆபத்தான நிலையில் இருந்த சுபா, சுதாகர் ஆகியோர் புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவத்துக்கான காரணம் குறித்து முத்தாண்டிக்குப்பம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.