நாம் தமிழர் கட்சி நிர்வாகியை தடுப்புக் காவல் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டாம் என அவரது தந்தை ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தார்.
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு வருபவர் கடல்தீபன். காவிரி விவகாரம் தொடர்பான பிரச்னையில் அண்மையில் கடலூரில் கர்நாடக மாநில அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த வழக்கில் இவர் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் கடல்தீபனின் தந்தை வா.பாலாறு மனு அளித்தார். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: எனது மகன் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் துறை முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது எங்களுக்கு அச்சமூட்டுவதாக உள்ளது.
பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்ட வழக்கில் முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளோம். இதுவரை எந்தவிதமான வன்முறைப் போராட்டங்களிலும் கடல்தீபனோ, அவரது கட்சியினரோ ஈடுபட்டதில்லை. எனவே, அவர்மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக்கொண்டார்.