மாணவர்களுக்கு ஒழுக்கம் மிக அவசியம் என்றார் கடலூர் மாவட்ட எஸ்பி செ.விஜயகுமார்.
கடலூர் தேவனாம்பட்டினத்திலுள்ள பெரியார் அரசு கலைக் கல்லூரியின் ஆண்டு விழா, விளையாட்டு விழா கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் ப.குமரன் தலைமை வகித்தார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் மா.ராஜா முன்னிலை வகித்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, விளையாட்டுப் போட்டிகள், கல்வி தொடர்பான பல்வேறு நிகழ்வுகளில் சிறப்பிடம் பெற்றவர்களைப் பாராட்டி பரிசு வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், மாணவர்கள் ஒழுக்கத்துடன் கல்வி பயன்று தங்களது வாழ்க்கையில் மேன்மையடைய வேண்டும் என்றார்.
கல்லூரி முதல்வர் ப.குமரன் பேசுகையில், இந்தக் கல்லூரியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அதிக போட்டி நிலவி வருகிறது. தற்போது கல்லூரியில் ரூ.2.50 லட்சத்தில் வகுப்பறையும், ஆய்வகமும் கட்டப்பட்டு வருகிறது.
எனினும், கூடுதல் கட்டடம் தேவைப்படுவது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், என்எல்சி இந்தியா நிறுவனம் தனது சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ் பெரிய அளவிலான கலையரங்கம், 10 வகுப்பறைகள் கட்டுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் ஆங்கிலம், கணிதம், வரலாறு பாடங்களில் எம்.பி.எல்., பி.எச்.டி. படிப்புகள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
இந்தக் கல்லூரியில் 25 ஆண்டுகளாக உடல்கல்வி இயக்குநர் பணியிடம் காலியாக இருந்த நிலையில், தற்போது இந்தப் பணியிடம் நிரப்பப்பட்டதைத் தொடர்ந்து விளையாட்டு விழா நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, தமிழ்த் துறை பேராசிரியர் கே.பழனிவேலு வரவேற்க, உடல்கல்வி இயக்குநர் தி.குமணன் உடற்கல்வி ஆண்டறிக்கை வாசித்தார்.
வேதியியல்துறைத் தலைவர் ஐ.வண்ணமுத்து நன்றி கூறினார்.