காங்கிரஸ் நிர்வாகி கொலை வழக்கு தொடர்பாக கடலூர் நீதிமன்றத்தில் புதுவை இளைஞர் சனிக்கிழமை சரணடைந்தார்.
புதுவை மாநிலம், பெரியகாலாப்பட்டைச் சேர்ந்தவர் ஜோசப் என்ற ரவி (44). புதுவை மாநில வடக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவராக இருந்து வந்தார். இவர், கடந்த ஜூலை 30-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே உள்ள பொம்மையார்பாளையத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இதுதொடர்பாக ஆரோவில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக புதுவை, கருவடிக்குப்பத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் சாண்டில்யன் (30) என்பவர் கடலூர் குற்றவியல் நீதித் துறை நடுவர் எண்-2 நீதிமன்றத்தில் சனிக்கிழமை சரணடைந்தார். இதனையடுத்து அவர் கிளைச் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.