கடலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் தொழில் தொடங்க வாய்ப்பு வழங்கப்படுமென மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி கூறினார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாற்றுத் திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம் ஆட்சியர் வே.ப.தண்டபாணி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது: ஒவ்வோர் வருவாய் வட்டத்திலும் தலா 2 ஆண், பெண்கள் என்ற விகிதத்தில் குழுக்கள் அமைத்து மாற்றுத் திறனாளிகளுக்கான நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். மாற்றுத் திறனாளிகள் தொழில் செய்து மேம்பாடு அடைய உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதியுடன் பெட்டிக்கடை வைத்து மாணவர்களுக்கு தேவையான பொருள்களை விற்பனை செய்யவும், புயல் பாதுகாப்பு மைய கட்டடங்களில் தேவையான கைத்தொழில் செய்து அதன் மூலம் வருவாய் ஈட்டவும், காகிதப்பை செய்வது, தையல் பயிற்சி போன்றவற்றுக்கும் ஏற்பாடு செய்ய மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது.
மாற்றுத் திறனாளிகள் வேலைவாய்ப்பு முகாமும் நடத்தப்படும். கடலூர் மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்கள், 16 பேரூராட்சிகள், 5 நகராட்சிகள் ஆகியவற்றில் மக்கள் கூடும் இடங்களில் மாற்றுத் திறனாளிகள் தொழில் செய்ய ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
அலுவலகங்களில் தொலைபேசி ஆபரேட்டர், கணினி ஆபரேட்டர் ஆகிய வேலைகளுக்கும் ஏற்பாடு செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைவடிக்கை எடுக்கப்படும். பயன்படாத அரசுக் கட்டடங்களில் மாற்றுத் திறனாளிகள் தொழில் செய்ய ஆவண செய்யப்படும். அனைத்து பொது இடங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்தளம் அமைக்கப்படும். கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய தீர்வு காணப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, மாவட்ட சமூக நல அலுவலர் கோ.அன்பழகி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஆனந்தன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சண்முகசுந்தரம், தனித் துணை ஆட்சியர் (ச.பா.தி) பரிமளம், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் வி.சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.