மீனவர்கள் பயன்பெறும் வகையில், வீராணம் ஏரியில் மீன் குஞ்சுகள் சனிக்கிழமை விடப்பட்டன.
இந்த ஏரியானது பாசனம், குடிநீர்த் தேவைக்கு மட்டுமின்றி உள்நாட்டு மீனவர்களின் தேவைக்காக மீன்களை வளர்க்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஏரியில் மீன் வளத் துறை சார்பில் வளர்க்கப்படும் மீன்களை பிடித்து மீனவர்கள் பயன்பெற்று வருகின்றனர். இதற்காக ஆண்டுதோறும் மீன் குஞ்சுகள் ஏரியில் விடப்படும். உள்நாட்டு மீனவர்கள் குறிப்பிட்ட தொகையை அரசுக்குச் செலுத்தி ஏரி மீன்களை பிடித்து விற்பனை செய்வர்.
இந்த ஆண்டு மீன்வளத் துறை சார்பில் ஏரியில் மீன் குஞ்சுகளை விடும் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை நடைபெற்றது. கடலூர் மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி தலைமையில் மீன்வளத் துறை இணை இயக்குநர் சி.சுப்பிரமணியன் முன்னிலையில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன. மாவட்ட ஆட்சியர் படகு மூலம் ஏரிக்குள் சென்று மீன்குஞ்சுகளை விட்டார்.
இதுகுறித்து ஆட்சியர் கூறியதாவது: ஏரியில் இந்த ஆண்டு தண்ணீர் நிரம்பியவுடன் மீன் குஞ்சுகளை விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 12 லட்சம் மீன் குஞ்சுகள் விட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, முதல்கட்டமாக ஒரு லட்சத்து 25 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன. இதில் ரோகு , கட்லா, மிறுகால் வகை மீன்கள் அடங்கும். அடுத்த 3 அல்லது 4 மாதங்களில் மீன் குஞ்சுகள் வளர்ந்துவிடும். இதைப் பிடித்து உள்நாட்டு மீனவர்கள் பயன்பெறுவர் என்றார் ஆட்சியர்.