காட்டுமன்னார்கோவில் அருகே அமைந்துள்ள வீராணம் ஏரியின் உச்ச நீர்மட்டம் 47.50 அடியாகும். இந்த ஏரியின் நீர்மட்டம் சனிக்கிழமை 47 அடியாக இருந்தது. ஏரியிலிருந்து சென்னை நகரின் குடிநீர்த் தேவைக்காக விநாடிக்கு 74 கன அடி வீதம் தண்ணீர் அனுப்பப்படுகிறது. ஆனால், கீழணையிலிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு அனுப்பப்பட்ட தண்ணீர் சனிக்கிழமை நிறுத்தப்பட்டது. இருப்பினும் கீழணையில் இருந்து வடக்கு ராஜன் வாய்க்கால் வழியாக விநாடிக்கு 500 கனஅடிவீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் பாதுகாப்பு கருதி சனிக்கிழமை 2-ஆவது நாளாக அந்தப் பகுதியில் உள்ள பாலத்தில் கனரக வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால், சென்னை - கும்பகோணம் சாலையில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மயிலாடுதுறை வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன.
கீழணைக்கு தண்ணீர் வரத்து ஞாயிற்றுக்கிழமை 3 லட்சம் கன அடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பொதுப் பணித் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளிடக் கரையில் விரிசலடைந்த பகுதிகளை மணல் மூட்டைகள் மூலம் பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.