தமிழக உழவர் முன்னணி அமைப்பின் கடலூர் மாவட்ட செயற்குழுக் கூட்டம் சிதம்பரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு அமைப்பின் தலைவர் கோ.சிவராமன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் என்.ஜெயபாலன், கோ.நாராயணசாமி, அ.மதிவாணன், மா.கோ.தேவராசன், வே.பொன்னுசாமி, சி.ராஜேந்திரன், ஜி.ராஜராஜசோழன், சிவ.அருளமுதன் உள்ளிட்டோர் பங்கேற்றனவர். ஆலோசகர் கி.வெங்கட்ராமன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், கஜா புயலில் உயிரிழந்தோருக்கும், நெல் ஜெயராமன், தமிழக உழவர் முன்னணி கடலூர் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் நடனகுஞ்சிதபாதம் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தீர்மானங்கள்: மேக்கேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிப்பதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தி வருகிற 18-ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெற உள்ள பேரணியில் கடலூர் மாவட்ட உழவர்கள் பெருந்திரளாகப் பங்கேற்பது, கடலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரி துண்டறிக்கை வெளியிட்டு கிராமங்கள் தோறும் 10-1-2019 வரை பரப்புரை மேற்கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.