கடலூரில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக நீதி கேட்டு, உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மார்க்கெட் காலனியைச் சேர்ந்த சேகர் மகள் ஜெயஸ்ரீ (21). இவரும், நெல்லிக்குப்பம் அருகேயுள்ள வாழப்பட்டைச் சேர்ந்த மருது என்பவரும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இதனால், இரு வீட்டாருக்கும் இடையில் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில், திங்கள்கிழமை ஜெயஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.
இதுகுறித்து சேகர் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய விசாரணை நடத்தப்படவில்லையாம். இதையடுத்து, செவ்வாய்க்கிழமை உடற்கூராய்விற்காக கடலூர் அரசு மருத்துவமனையில் ஜெயஸ்ரீ உடல் வைக்கப்பட்டிருந்தது.
தகவலறிந்து வந்த அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுநகர் காவல் ஆய்வாளர் த.ச.சரவணன் சம்பவ இடத்துக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து உறவினர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.