மகா சிவராத்திரியை முன்னிட்டு, பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வர் கோயிலில் சரகொன்றை நாதருக்கு பக்தர்கள் தங்களது கரங்களால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
பண்ருட்டி திருவதிகையில் பெரிய நாயகி உடனுறை வீரட்டானேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இந்தக் கோயிலில் மகா சிவராத்திரி விழா விமர்சையாக நடைபெறும்.
நிகழாண்டு மகா சிவராத்தி நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காலையில் அனைத்து மூலவர்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனையும், பகல் 6 காலம், இரவு 4 காலம் என 10 கால பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, சுவாமி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் மாட வீதி உலா நடைபெற்றது.
கோயில் வளாகத்தில் உள்ள சரகொன்றை நாதருக்கு, செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் புதன்கிழமை காலை 6 மணி வரை 108 பஞ்சநதி தீர்த்தங்களால் பக்தர்களே அபிஷேகம் செய்ய பண்ருட்டி இந்து சமுதாய ஆன்மிக அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தது.
இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சரகொன்றை நதருக்கு அபிஷேகம் செய்தனர்.
நாட்டியாஞ்சலி: மகா சிவராத்திரியை முன்னிட்டு கோயில் வளாகத்தில் நாட்டியாஞ்சலி, சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பண்ருட்டி, கடலூர், திருவண்ணாமலை, சென்னை, புதுச்சேரி, காஞ்சிபுரம், கோவை, கேரளம், பெங்களூர், கொல்கத்தா, இலங்கை உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த கலைஞர்கள், திங்கள்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரையும், செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் பரதம், குச்சிப்புடி, ஒடிசி, மோகினியாட்டம், நாட்டிய நாடகம் ஆடினர்.
நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருஅதிகை நாட்டியாஞ்சலி விழாக் குழுவினர் செய்திருந்தனர்.