கடலூர் மாவட்டம், ராமநத்தத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டுக் கொடி பயணக் குழுவுக்கு செவ்வாய்க்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22-ஆவது மாநில மாநாடு தூத்துக்குடியில் பிப்.17-ஆம் தேதி தொடங்கி 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மாநாட்டை முன்னிட்டு, சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு கட்சியின் மாநில மாநாட்டுக் கொடி எடுத்துச் செல்லப்படுகிறது. அவ்வாறு செல்லும் பயணக் குழுவுக்கு கடலூர் மாவட்ட எல்லையான ராமநத்தத்தில் செவ்வாய்க்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கொடி பயணக் குழுவில் பங்கேற்று ராமநத்தம் வந்தவர்களுக்கு கடலூர் மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம் தலைமையில், மாநிலக் குழு உறுப்பினர் மூசா முன்னிலையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ராமநத்தம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரசார மேடையில் தலைவர்கள் உரையாற்றினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.உதயகுமார், கோ.மாதவன், எம்.மருதவாணன், எஸ்.ஜி.ரமேஷ்பாபு, பி.கருப்பையன், ஜி.ஆர்.ரவிச்சந்திரன், எஸ்.திருஅரசு, என்.எஸ்.அசோகன், திட்டக்குடி வட்டக்குழு செயலாளர் எஸ்.காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக, விருத்தாசலம் வட்டக் குழு சார்பில் வேப்பூரிலிருந்து 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் பேரணியாக வந்திருந்த கட்சியினர் பயணக் குழுவுக்கு வரவேற்பு அளித்தனர்.