இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனர்.
திட்டக்குடி வட்டம், பொன்னேரியில் சாலையோரம் இருந்த குடியிருப்புகள் அகற்றப்பட்டு அண்மையில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. மேலும் பாலம், தெருவிளக்கு, கால்வாய்கள் அமைக்கப்பட்டன. அகற்றப்பட்ட குடியிருப்பு வாசிகளுக்கு அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய மாற்று இடம் வழங்கப்படுமென அப்போது மாவட்ட நிர்வாகம் சார்பில் உறுதியளிக்கப்பட்டதாம்.
அதன்படி, குடியிருப்புகளை இழந்தவர்களுக்கு அருகிலேயே மாற்று இடம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும், மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இதைத் தொடர்ந்து, இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி சார்பில், பாதிக்கப்பட்டோருக்கு பெண்ணாடத்தை அடுத்த பெ.பொன்னேரியில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்தக் கட்சியின் மாவட்டக் குழுத் தலைவர் கொளஞ்சிநாதன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ப.பானுமதி, ஜான்சன், சரசம்
மாள், தாஹிரா, அம்சவள்ளி, வேளாங்கன்னி, ஜான்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாவட்டச் செயலர் கோகுலகிறிஸ்டீபன் கண்டன உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, வட்டாட்சியர் அலுவலகம் எதிரே முற்றுகைப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து, துணை வட்டாட்சியர் எழில்வளவனிடம் மனு அளிக்கப்பட்டது.
மனுவைக் கோட்டாட்சியருக்கு அனுப்பிவைத்து அவரது பரிந்துரையின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.