கிறிஸ்தவர்களின் 40 நாள்கள் தவக்காலம் சாம்பல் புதன் நிகழ்வுடன் தொடங்கியது.
கிறிஸ்தவர்களின் முக்கியமான தினங்களில் ஒன்று இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3 -ஆம் நாள் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாளாகும். இந்த நாளை முன்னிட்டு வரும் 46 நாள்களில் ஆறு ஞாயிற்றுக்கிழமைகள் தவிர மற்ற 40 நாள்களில் கிறிஸ்தவர்கள் தவமிருந்து ஜெபிப்பார்கள்.
அதன்படி, 40 நாள்கள் தவக்காலம் புதன்கிழமை சாம்பல் புதனாக அனுசரிக்கப்பட்டு தொடங்கியது. இதையொட்டி, மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
கடலூர் கார்மேல் அன்னை ஆயலத்தில் அந்தோணிராஜ் அடிகளார் தலைமையில் நடைபெற்ற பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
இதேபோல, திருப்பாதிரிபுலியூர் ஆர்.சி. தேவலாயத்தில் ஆக்னலா அடிகளாரும், சாமிப்பிள்ளை நகரிலுள்ள ஆர்.சி.தேவாலயத்தில் பெரியநாயகம் அடிகளாரும், முதுநகர் தேவாலயத்தில் ராபர்ட் அடிகளாரும் பிரார்த்தனை நடத்தினர்.
அப்போது, கடந்த ஆண்டு குருத்தோலை பவனியின் போது பயன்படுத்தப்பட்ட ஓலைகளை எரித்து அதிலிருந்து பெற்ற சாம்பலை வழங்கி தவக்காலத்தை தொடக்கி வைத்தனர்.
இதையொட்டி, மார்ச் 25-இல் குருத்தோலை ஞாயிறு பவனியும், 30-இல் இயேசு நாதர் சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளியும், ஏப்ரல் 1- ஆம் தேதி இயேசு உயிர்த்தெழும் ஈஸ்டரும் நடைபெறுகிறது. ஈஸ்டர் பண்டிகையுடன் தவக்காலமும் நிறைவு பெறும்.