குடிநீர் வழங்கக் கோரி, நெய்வேலி பாரதி நகர் பொதுமக்கள் என்.எல்.சி. இந்தியா நிறுவனத் தலைமை அலுவலகம் செல்லும் வழியில் காலிக் குடங்களுடன் புதன்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெய்வேலி பி பிளாக், பாரதி நகர் சிலோன் காலனியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு என்.எல்.சி. இந்தியா நிர்வாகம் காலை - மாலை என இருவேளையும் குடிநீர் விநியோகம் செய்து வந்தது. கடந்த 4 மாதங்களாக குடிநீர் விநியோகம் தடை பட்டதால் அந்தப் பகுதி மக்கள் அவதி அடைந்தனர். நெய்வேலியில் விமான நிலையம் அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளவர்கள், குடிநீர் வழங்கும் குழாயில் இருந்து தண்ணீர் எடுத்ததால் குடிநீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பாரதி நகர் பொதுமக்கள் பலமுறை என்.எல்.சி. இந்தியா நிறுவன அதிகாரிகளிடம் முறையிட்டு நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இதனால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 120-க்கும் மேற்பட்டோர் காலிக் குடங்களுடன், என்.எல்.சி. இந்தியா நிறுவனத் தலைமை அலுவலகம் செல்லும் சாலையில் முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த நெய்வேலி நகரிய போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். என்.எல்.சி. இந்தியா நிறுவன குடிநீர் வழங்கும் அதிகாரி குப்புசாமி பொதுமக்களிடம் குடிநீர் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பாரதி நகர் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.