நெல்லிக்குப்பம் நகராட்சியின் சொத்து வரி உயர்வைக் கண்டித்து, நெல்லிக்குப்பம் நகர அனைத்துத் தொழில் வர்த்தக சங்கத்தினர் பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்தச் சங்கத் தலைவர் சேக் தாவூத் தலைமை வகித்தார். செயலர் ராமலிங்கம், பொருளாளர் சம்சுதீன், சட்ட ஆலோசகர் ராம்சிங், நிர்வாகிகள் அமரநாதன், ரவி, சுரேஷ், கருணாகரன், நாசர், ஆனந்த், ஸ்ரீதர், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட சுமார் 300-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
நகராட்சி நிர்வாகம் 13 அரையாண்டு வரியைச் சேர்த்து வசூல் செய்வதை நிறுத்த வேண்டும். தமிழக அரசும், உள்ளாட்சித் துறை அமைச்சரும் வரி வசூல் செய்வதை நிறுத்தக் கோரி அரசாணை வெளியிட வேண்டும்.
பிறப்பு - இறப்பு சான்றுகள் 48 மணி நேரத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.