சொத்துத் தகராறில் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
பெண்ணாடத்தை அடுத்த மாளிகைக்கோட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன் முருகன் (38). இவர், வெள்ளிக்கிழமை காலை மாளிகைக்கோட்டம் மதுக் கடைக்குச் செல்லும் சாலையில் இறந்து கிடந்ததைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள், பெண்ணாடம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில், அங்கு வந்த பெண்ணாடம் காவல் ஆய்வாளர் ராஜா தலைமையிலான காவலர்கள் முருகனின் சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது: முருகனின் பெற்றோர் இறந்துவிட்டதால், இருளம்பட்டையைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் முருகனை வளர்த்து வந்தார். அதற்காக, தனது குடும்பச் சொத்திலிருந்து ஒன்றரை சென்ட் இடத்தை முருகனுக்கு கொடுத்துள்ளார்.
முருகனுக்கு கொடுத்த இடத்தில் அவரது சித்தப்பா மகன் கண்ணன் வீடு கட்டி வருகிறாராம். இதனால், இருவருக்கும் பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு முருகனை, கண்ணன் அதே பகுதியில் உள்ள மதுக் கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது, இருவருக்கும் இடையே சொத்து தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த கண்ணன், முருகன் கட்டியிருந்த வேட்டியால் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்தது தெரிய வந்தது எனத் தெரிவித்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.