குறிஞ்சிப்பாடியில் வியாழக்கிழமை அரசுப் பேருந்தில் பணியாற்றிய தாற்காலிக நடத்துநர் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம், வடலூர், பார்வதிபுரத்தில் வசித்து வந்தவர் நஜிபுதீன் (38). இவருக்கு ரிகானா (33) என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். டேங்கர் லாரி ஓட்டுநரான நஜிபுதீன், அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்த நாள் முதல், வடலூர் பணிமனையில் தாற்காலிக நடத்துநராகப் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், இவர் வியாழக்கிழமை காலை வடலூரில் இருந்து குறிஞ்சிப்பாடிக்கு செல்லும் நகர்ப் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றினார். பின்னர், அந்தப் பேருந்து குறிஞ்சிப்பாடியில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு பண்ருட்டிக்கு புறப்பட்டது.
அப்போது, பயணச்சீட்டு வழங்குவதற்காக தனது இருக்கையில் இருந்து எழுந்த நஜிமுதீனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாம். இதனால், இருக்கையில் சரிந்த அவரை பேருந்தில் இருந்தவர்கள் மீட்டு, குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.